திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 3-வது தெருவில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் குடிநீர் வீணாகி வந்தது. மேலும் உடைப்பின் வழியாக வெளியேறும் குடிநீர் அருகே உள்ள தாழ்வான பகுதியில் தேங்கி நின்றது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இதுதொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.