நாகை மாவட்டம் வாய்மேடு சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாகுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வாய்மேட்டை அடுத்த வண்டுவஞ்சேரியில் இருந்து அண்ணாபேட்டை ,தகட்டூர், மருதூர் வழியாக வேதாரண்யம் வரையிலான பகுதிகளில் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க உடைப்புகள் ஏற்பட்டுள்ள குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?