அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து மேற்கு புறமாக செல்லும் சாலையில் மாவட்ட நூலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வழியாக பெரம்பலூர், திருச்சி செல்லும் பஸ்களும், கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில் இரண்டு புறமும் எண்ணற்ற கடைகள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிடத்திற்கு எதிரே உள்ள கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முதன்மை சாலையிலே வாகனங்களை நிறுத்துவதால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் 108 ஆம்புலன்சுகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.