தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-28 12:18 GMT
கரூர் பகுதியில் இருந்து வாங்கப்பாளையம், வெங்கமேடு, இனாம்கரூர், மண்மங்கலம், சேலம் பைபாஸ் சாலை மற்றும் அரசு காலனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகிறது. இதில் வெங்கமேடு மேம்பால பகுதிளை விட்டு இறங்கியதும் சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகில் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகாலில் இருந்து கசிவு ஏற்பட்டு டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் காரணமாக இப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. இதனால் அதிகளவிலான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இவர்கள் இப்பகுதியில் கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்