கரூர் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அம்மன் நகர் உள்ளது. அம்மன் நகர் வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்கள் அதிகரித்து விட்டனர். இதனால் இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அம்மன் நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இந்த குண்டும், குழியுமான சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.