அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியிலிருந்து தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ள மு.புத்தூர் கிராமத்தில் நீண்ட காலமாக தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் 24 மணி நேரமும் அசுரவேகத்தில் விபத்துகள் ஏற்படுத்தும் விதமாக டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்வதால் முனியங்குறிச்சி பிரிவு பாதை, சேலத்தார் காடு, மங்கட்டான், மு.புத்தூர் கிராம பகுதிகளில் விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதனைகருத்தில் கொண்டு விபத்து நிகழும் 7 இடங்களில் கடந்த ஆண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அந்த வேகத்தடைகளில் இந்த நாள் வரை வெள்ளை நிற பட்டைகளும், சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுவதால் அதிகளவில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.