மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக கால்நடைகள் சாலைகளில்சுற்றித் திரிவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்