புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பொக்கிஷக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சில மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் சிதிலமடைந்த ஒருசில மின் கம்பங்களின் அருகே புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பழைய மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் புதிய மின் கம்பத்திற்கு மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. எனவே பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் கால்நடைகள் மற்றும் விவசாயிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.