அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வி.கைகாட்டி செல்லும் சாலையில் முனியங்குறிச்சி- புத்தூர் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தின் வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புகின்றனர். மேலும் இவ்வழியே பஸ்களும் சென்று வருகிறது. இங்குள்ள ஆபத்தான வளைவு பகுதியின் ரோட்டின் கிழக்கு புறத்தில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்துக்கு இடையூறாகவும் எதிரில் வரும் வாகனங்களை கண்டறிய முடியாத அளவில் கருவேல மரங்கள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.