புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பூர் கிராமத்தில் இருந்து பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.