நாகையிலிருந்து அக்கரைப்பேட்டையை இணைக்கும் வகையில் கடுவையாற்றில் மேம்பாலம் உள்ளது. வேளாங்கண்ணிக்கு நாகை கிழக்கு கடற்கரை வழியாகவும், அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் செல்லலாம். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருபவர்கள் அக்கரைப்பேட்டை மேம்பாலம் வழியாக தான் செல்வார்கள். மேம்பாலத்தில் பல மாதங்களாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பாலத்தின் வழியாக நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்பவர்களும் இருளில் சாலை தெரியாமல் பாலத்திலிருந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.