மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர். மேலும் அரசின் மூலம் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளையும் பெற்று வந்தனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. குறிப்பாக ரேசன் கடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கடையின் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மழைக்காலங்களில் வீணாகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரேசன் கடை கட்டிடத்தை சீரமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.