திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எதுமலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இப்பகுதியில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்ட மக்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை நேரம் மற்றும் இரவு 10 மணிக்கு மேலும் அதிக விலைக்கு கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இதன் காரணமாக எப்போது சென்றாலும் மது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மது பிரியர்கள் அங்கே வந்து மது வாங்கி குடித்து விட்டு தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.