கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெரு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் நீலமேகப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்த போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இங்கே மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. தினந்தோறும் இப்பகுதி வழியாக பள்ளிகளுக்கு வேன்களிலும், மோட்டார் சைக்கிளிலும் பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். அதுபோல பொதுமக்கள் பலரும் இந்த சாலை வழியாக தினசரி பயணித்து வருகின்றனர். இப்பகுதியில் வேகத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. எனவே உடனடியாக அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.