மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்தமருத்துவப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். திருக்கடையூர், டி.மணல்மேடு, கிள்ளையூர், தில்லையாடி,காழியப்பநல்லூர், பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கம் பங்கு ஆகிய ஊராட்சியில் இருந்து வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள பல மருத்துவ உபகரணங்கள் உரிய பணியாளர்கள் இல்லாததால் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் மற்றும் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.