கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், கருவூல அலுவலகம், கிளைச் சிறைச்சாலை ஆகியவை அனைத்தும் ஒரே வளாகத்திற்கு உள்ளேயே உள்ளது. இந்த நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இ-சேவை மையம் செயல்படும் கட்டிடத்தின் முன்பு மழைநீர் வழிந்தோடும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மழை நீர் செல்லும் வகையில் உள்ள வடிகாலை சரியாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் அதில் செடிகள் முளைத்து வருகிறது. அதிக அளவில் செடிகள் வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில் விஷ ஜந்துக்கள் அதில் தங்க கூடும். பல்வேறு தேவைகளுக்காக இந்த அலுவலக வளாகத்திற்குள் வரும் பொதுமக்களுக்கு அது அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே மழைநீர் வடிகாலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். அதுபோல் இந்த அலுவலக வளாகம் முழுவதும் தேவையற்ற குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.