திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு, கோலடி ரோடு, தேவி நகர் தெருக்களில் மின்வாரியத்தில் இருந்து மின் அளவீடு கடந்த 4 மாதங்களாக நேரில் வந்து எடுக்கவில்லை. ஆனால் நேரில் வந்து பார்த்தது போல், வீடு பூட்டி உள்ளது என்ற காரணம் சொல்லி ஏற்கனவே எடுத்திருந்த அளவீட்டையே கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் மீட்டர் வீட்டின் வெளியே தான் உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கேட்டாலும் அதற்கு சரியான விளக்கம் கொடுப்பது இல்லை. இப்போது வெயில் காலமாக இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. இவ்வாறு இருக்கும்போது மீண்டும் நேரில் வந்து கணக்கு எடுக்கும் போது மிக அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் வழக்கம்போல தொடர்ந்து அளவீடு எடுக்க நேரில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.