அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி கிராமத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். நடந்து செல்லும் பொதுமக்களையும் வாகனங்களில் செல்பவர்களையும் கூட்டமாக சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே செல்லும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.