திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தற்போது ஓரளவு மரங்கள் நிறைந்துள்ள சாலை என்றால் அது மதுரை சாலை தான். மற்ற பல இடங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்டு விட்டது. இருக்கும் மரங்களின் எண்ணிக்கையும் மிக குறைவு தான். அந்த மரங்களையும் கூட பல இடங்களில் மக்கள் தான் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் சாலையோரங்களில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களில் அதிக அளவில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்திட விளம்பர வாசகங்கள் அடங்கிய அட்டையை மரத்தில் தொங்க விடாமல் ஆணியை வைத்து அடித்து விடுகின்றனர். அதிலும் ஒரே மரத்தில் அதிக அளவில் ஆணிகள் அடிக்கப்படுகின்றது. இதனால் மரங்கள் பட்டுப்போக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.