தர்மபுரி மாவட்டம் கொசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாளையம், போடம்பட்டி கிராம பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக மொரப்பூரிலிருந்து கல்லாவி செல்லும் சாலையில் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணற்றின் மேல் பகுதி திறந்த நிலையில் இருப்பதால் அணில், ஓநாய், எலி உள்ளிட்டவை விழுந்து செத்து மிதக்கின்றன. இந்த தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றுக்கு மேல்மூடி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.