கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு செவிலியரை நியமனம் செய்யப்பட்டு அந்த செவிலியர் அங்கேயே தங்கி இருந்து சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகளை வழங்கி வந்தார். இந்நிலையில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுகாதார நிலையம் சிதிலமடைந்தது. இதன் காரணமாக சுகாதார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து மாற்று இடத்தில் வைத்துவிட்டனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாற்று சுகாதார நிலையம் கட்டித் தரும்படி சுகாதாரத்துறைக்கு பலமுறை புகார் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் ஆறு கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.